பத்து பஹாட், ஜூலை 2: ஜோகூர் மாநிலத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு எவ்வித குந்தகமும் விளைவிக்காமல், மாநிலத்திற்கான இன்னும் கூடுதலான நிலையான வளர்ச்சித் திட்டங்களை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வழங்கும் என மக்கள் நீதிக் கட்சியின் (PKR) துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலம் மிகப்பெரிய பொருளாதார சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், அதன் மாநில நிர்வாகம் இன்னும் சீரமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த வளர்ச்சியும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே குவிந்துவிடாமல் இருக்கும்.
ஜோகூர் மாநிலத்தின் தற்போதைய வளர்ச்சி சமச்சீரற்றதாக உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் ஜோகூர் பாருவை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்குவதால், மற்ற மாவட்டங்களுடனான பொருளாதார இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமிருடின் தெரிவித்தார்.
இந்த நிலையை மாற்றி, ஜோகூர் மாநிலத்தை மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்' என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் ஜோகூர் மாநிலம் 101 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளைப் பதிவு செய்திருந்த போதிலும், சிலாங்கூர் மாநிலத்துடன் ஒப்பிடுகையில் அங்குப் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்றார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க மக்கள் ஆணை வழங்கினால், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ) போன்ற கூட்டரசு அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முழு ஆதரவளித்து, அதன் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள் மாநிலத்திற்குள் கொண்டு வரப்படும் என அவர் உறுதியளித்தார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடுகிறது.







