கோலாலம்பூர், 12 ஜனவரி: ரவாங் அருகே உள்ள வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (Plus) 441.2 கிலோமீட்டரில் நேற்று நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர், சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
காலை 5.45 மணியளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் பலத்த காயமடைந்த எட்டு பேருந்து பயணிகளில் 37 வயதுடைய அந்த நபரும் ஒருவர் என்றார் கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் நசீர்.
மேலும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், லாரி ஓட்டுநரும் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "வலதுபுறப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதால், நெடுஞ்சாலையின் நடுவே நின்றது. அப்போது, அதே திசையில் வந்த ஒரு லாரியும் மோட்டார் சைக்கிளும் பேருந்தின் இடது பகுதியில் மோதின. இதில் லாரி ஓட்டுநரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பலத்த காயமடைந்தனர். ஆனால் பேருந்து ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை," என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் பிரிவு 41(1)-ன் கீழ் மரணத்தை விளைவித்த விபத்து என விசாரிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் அல்லது இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள், போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் ஃபாரா ஹானிம் அபு பக்கரை 019-331 1552 என்ற எண்ணிலோ அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-6126 2222 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சுங்கை புவாயா மற்றும் ரவாங் இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்திருந்தார்.


