கோலாலம்பூர், மார்ச் 6- துருக்கியின் வான்பரப்பை நோக்கி ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சம்பவத்தை அடுத்து, அந்த நாட்டுடன் மலேசியா தனது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கிய அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகனுடன் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர், பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் மிகவும் பலவீனமாக இருப்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் தாக்குதல்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதாக இரு தலைவர்களும் கவலை வெளியிட்டனர்.
குறிப்பாக, ஈரானிய உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் படுகொலைகள், மத்திய கிழக்கை நீண்டகால மற்றும் கடுமையான சீரற்ற நிலைக்குத் தள்ளும் அபாயம் இருப்பதை அன்வார் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சூழலில் அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்துடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
முஸ்லிம் உலகின் மனசாட்சியாகத் திகழும் அதிபர் எர்டோகனின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு தூதரக ரீதியிலான தீர்வுக்கு அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் வெகுவாகப் புகழ்ந்தார்.
பதற்றத்தைத் தணிக்கவும், மேற்கு ஆசியாவிற்கு அப்பால் பரவக்கூடிய மோதல்களைத் தவிர்க்கவும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என மலேசியா அறைகூவல் விடுத்துள்ளது.







