புத்ராஜெயா, மார்ச் 4: கிள்ளான் துறைமுகத்தில் நேற்று மற்றும் இன்று மேற்கொள்ளப்பட்ட 'ஒப்பராசி போங்கார் கொந்தேனா' (தொடர் 1/2026) சோதனையின் போது, மொத்தம் 99 கொள்கலன்களைப் பரிசோதித்ததில் 47 கொள்கலன்களில் மின்னணு கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் கிள்ளான் துறைமுகத்திற்குச் சென்று, தடுத்து வைக்கப்பட்டுள்ள மின்னணு கழிவு கொள்கலன்களின் நிலையை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 45 கொள்கலன்கள் பரிசோதிக்கப்பட்டதில், 40 கொள்கலன்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவுகள் இருந்தன; அவற்றில் 22 மின்னணு கழிவுகள் என அடையாளம் காணப்பட்டன.
இன்றைய சோதனையில் 54 கொள்கலன்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 32 கொள்கலன்களில் கழிவுகள் இருந்தன, அதில் 25 மின்னணு கழிவுகள் என்பது உறுதி செய்யப்பட்டது. மலேசியாவைச் சட்டவிரோதக் கழிவு கொட்டும் இடமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கை காட்டுவதாக சுற்றுச்சூழல் துறை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கொள்கலன்களை மீண்டும் அவற்றின் பிறப்பிடத்திற்கே திருப்பி அனுப்புவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டப்பிரிவு 34B-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்; இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, இறக்குமதி நடைமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறிய கப்பல் நிறுவனங்கள் அல்லது ஏஜெண்டுகளுக்கு எதிராக அதே சட்டப்பிரிவு 43-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.









