துபாய், மார்ச் 5- ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில், அங்குள்ள சுமார் 8,500 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டிற்கான மலேசிய தூதர் தெங்கு சிராஜுஜமான் தெங்கு முகமது அரிஃபின் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரக தற்காப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ள நிலையில், துபாயில் உள்ள மலேசிய தூதரகமும் அபுதாபியில் உள்ள துணைத் தூதரகமும் மலேசியர்களுக்கு உதவ 24 மணிநேரமும் இயங்கி வருகின்றன.
விமானப் போக்குவரத்து பாதிப்பால் சிக்கித் தவிக்கும் மலேசிய பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வவுச்சர்களை வழங்க அமீரக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை உறுதி செய்த பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படும் மலேசியர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து கொள்வதன் மூலம், அவர்களுக்குத் தேவையான உடனடி உதவிகளைத் தூதரகம் விரைவாக வழங்க முடியும் என தூதர் வலியுறுத்தியுள்ளார்.
அவசர காலங்களில் மலேசிய தூதரகத்தை +971 50 6146894 அல்லது +971 50 737 9196 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள குடும்பத்தினர் கவலைப்படத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், அமீரகத்தில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பைத் தூதரகம் தொடர்ந்து மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.






