துபாய், 22 நவம்பர்- துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் துபாய் விமான கண்காட்சி எமிரேட்ஸின் 40 ஆவது ஆண்டு விழாவில் நடைபெற்று வருகிறது. 150 நாடுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் பிரம்மாண்டமான விமான கண்காட்சிக்காக துபாய்க்கு வந்துள்ளனர். துபாய் விமான கண்காட்சி நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி, இன்றைய தினம் 21ம் தேதி முடிவடையும் என்று திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணி அளவில் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்ததும் எரிபொருளை கொட்ட விமானியால் இயலவில்லை. இதனால் தேஜஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சுழன்று தரையில் மோதி வெடித்து தீப்பிடித்தது. தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.




