ஷா ஆலாம்: கடந்த வாரம் செக்ஷன் 7 பள்ளிவாசலில் உண்டியல் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று நபர்களுக்கு, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆறு மாத சிறைத்தண்டனையும், தலா ரிம4,000 அபராதமும் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கார் கழுவும் மைய ஊழியரான கே. தினேசுரன் (26), லோரி உதவியாளர் ஆர். நிஷன்ராஜ் (22), மற்றும் தொழிற்சாலை ஊழியர் ஆர். டனேஷ் (27) ஆகியோர் என சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் முஹம்மது ஷாபிக் சுலைமான், சிறைத் தண்டனையை இன்றிலிருந்து தொடங்க உத்தரவிட்டார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர்கள் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
குற்றப்பத்திரிகையின்படி, கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில், ரிம2,000 மதிப்புள்ள துருப்பிடிக்காத எஃகு உண்டியலை மூவரும் கூட்டாகத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டம் பிரிவு 380-இன் கீழ் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதே வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 17 வயதுடைய மற்றொரு குற்றவாளிக்கான தண்டனை, சமூகநலத் துறையின் (JKM) நன்னடத்தை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
தீர்ப்புக்காகக் காத்திருக்கும் வேளையில், அந்த இளையரை ரிம1,500 ஜாமீனில் ஒரு நபர் உத்திரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது. அவருக்கான வழக்கு விசாரணை தனிப்பட்ட முறையில் நடைபெற்றது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஸ்விந்தர் சிங் மற்றும் அஷ்ருல் ஹைக்கல் ஆஜராகினர். அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் முவாஸ் கவாரிஸ்மி அஸ்ஃபார் வழக்கை நடத்தினார்.
முன்னதாக, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார், இந்த வழக்கில் ஆத்திரமூட்டும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், பணத் தேவைக்காகவே சந்தேக நபர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த மாநில காவல்துறைக்கு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்டியல் திருடிய குற்றத்திற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று நபர்களுக்கு, தலா ரிம 4,000 அபராதமும் ஆறு மாத சிறை விதித்தது.
4 மார்ச் 2026, 3:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்
Bernama
26 ஜூலை 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு
Shalini Rajamogun
26 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



