ஜார்ஜ்டவுன், மார்ச் 3 - இங்குள்ள தஞ்சோங் தோக்கோங்கில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில், நான்கு அடுக்கு குடிசை வீடுகள் முற்றாக எரிந்து நாசமானதால், அங்கு வசித்த 23 குடியிருப்பாளர்கள் உடுத்திய உடையுடன் தவிக்கின்றனர்.
பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறுகையில், அதிகாலை 3.14 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், பாகன் ஜெர்மால் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் முதல் வாகனம் ஏழு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
"சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. இந்த தீ விபத்தில், 55 முதல் 75 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட நான்கு வீடுகளும், குடியிருப்பாளர் ஒருவருக்குச் சொந்தமான ஹோண்டா எக்ஸ்5 ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிந்து நாசமானது."
"தீயணைப்புப் படையினர் அதிகாலை 3.42 மணியளவில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அருகிலுள்ள மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுத்தனர். காலை 6 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு, பின்னர் குளிர்விக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன," என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட நான்கு வீடுகளிலும் மலாய் மற்றும் ரோஹிங்கியா குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆண்கள், ஆறு பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட மொத்தம் 23 பேர் வசித்து வந்தனர். தீ விபத்தை உணர்ந்ததும் உடனடியாக அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினர் என அவர் மேலும் கூறினார்.








