மதம், இனம் தொடர்பான விவகாரங்களில் வரம்பு மீறி கருத்துரைக்க வேண்டாம்

3 மார்ச் 2026, 2:02 AM
மதம், இனம் தொடர்பான விவகாரங்களில் வரம்பு மீறி கருத்துரைக்க வேண்டாம்

கோலாலம்பூர், மார்ச் 3 : சமூக ஊடகங்களில் மதம் மற்றும் இனம் தொடர்பான உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் வரம்பு மீறிய கருத்துக்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்) அறிவுறுத்தியுள்ளது.

மலேசியர்கள் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் செயல்களுக்குச் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.

"தவறான புரிதல்களைத் தவிர்க்க, எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு, உறுதிப்படுத்தப்பட்ட மூலங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை மக்கள் சரிபார்க்க வேண்டும்.

"குறிப்பாக, நாம் பண்டிகைக் காலத்தை நெருங்கும் வேளையில், இந்த அமைதியான மற்றும் நிம்மதியான சூழல் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் இங்குள்ள காவல்துறைப் பயிற்சி மையத்தில் (புலாபோல்), உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுடன் நடைபெற்ற காவல்துறையின் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

சமீபத்தில் ஒரு பொதுப் பல்கலைக்கழக மாணவர், ‘திரெட்ஸ்’ தளத்தில்
அல்-குர்ஆனை அவமதித்து களங்கப்படுத்தியதாகக் கூறப்படும் பதிவுன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் எழுந்த கண்டனங்கள் குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட மாணவர் பகாங்கில் உள்ள குவாந்தான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கண்டறிந்த பிறகு, அந்த சந்தேக நபர் மீது குற்றம் சாட்ட தலைமை வழக்கறிஞர் அனுமதி வழங்கியுள்ளார் என்று முகமட் காலிட் கூறினார்.

தற்போது காவல்துறையின்
தடுப்புக் காவலில் உள்ள அந்த சந்தேக நபர், நல்ல நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி, சமூக ஊடகத்தில் இஸ்லாத்தை அவமதித்ததாகச் சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நாடு தழுவிய அளவில் 62 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில், ரமலான் மாதம் முழுவதும் புலாபோலில் உள்ள சல்லேஹின் பள்ளிவாசலில் காவல்துறை உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக, யாயாசான் பெம்பாங்குனான் எக்கோனோமி இஸ்லாம் மலேசியா (யாப்பிம்) வழங்கிய 50,000 ரிங்கிட் நன்கொடையையும் முகமட் காலிட் பெற்றுக்கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.