சிங்கப்பூர், பிப் 27- சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2025-ஆம் ஆண்டில் 0.87 என்ற வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய அவர், கடந்த ஆண்டு வெறும் 27,500 குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பது நாட்டின் வரலாற்றில் மிகக்குறைந்த எண்ணிக்கையாகப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த தற்போதைய சரிவு நீடித்தால், ஒவ்வொரு 100 குடியிருப்பாளர்களுக்கும் மூன்றாவது தலைமுறையில் வெறும் 19 பேரக்குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள் என்ற அதிர்ச்சிகரமான கணிப்பை அவர் முன்வைத்தார்.
மறுபுறம், நாட்டின் மக்கள் தொகை வேகமாக மூப்படைந்து வருவதால், தற்போது ஐந்து குடிமக்களில் ஒருவர் 65 வயதைக் கடந்த முதியவராக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
குடியேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 0.8 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








