கோலாலம்பூர், பிப். 27 - லெம்பா பந்தாய் வட்டாரத்தைச் சேர்ந்த 350 இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், இந்த ரமலான் மாதத்தில் தொடர்புதுறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்சிலிடமிருந்து, 'பெர்லிண்டுங்கான் தெனாங்' திட்டத்தின் கீழ் அவர்களுக்கான ஒரு வருடக் காப்புறுதி சந்தாவை வழங்குவதாக அறிவித்தார்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாமி, இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் உட்பட கிக் பொருளியல் ஊழியர்களின் எதிர்கால நலனில் மடாணி அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகிறது என்பதற்கு இந்தக் காப்புறுதி நிதியுதவி ஒரு சான்றாகும் என்றார்.
"நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முன் களப் பணியாளர்களாகக் கருதப்பட்ட 'ரைடர்களுக்கு' நான் வழங்கும் பாராட்டு இதுவாகும். அவர்களின் பங்களிப்பை நான் இன்றுவரை மறக்கவில்லை," என்று அவர் இங்குள்ள லெம்பா பந்தாயில் நடைபெற்ற 'இஹ்யா ரமலான் தெமுமி 2.0' சிறப்புத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.
ஓராண்டு நிதியுதவிக் காலம் முடிந்த பிறகு, ஓட்டுநர்கள் ஆண்டுக்கு 100 ரிங்கிட் செலுத்தி அந்தக் காப்புறுதித் திட்டத்தைத் தொடரலாம் என்று அவர் கூறினார்.
மேலும், அடுத்தடுத்த சேவைகளுக்காகக் காத்திருக்கும் வேளையில் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் ஓய்வெடுப்பதற்காக லெம்பா பந்தாய் பகுதியில் ஒரு சிறப்பு ஓய்விடத்தை உருவாக்கும் எண்ணத்தையும் ஃபாமி வெளிப்படுத்தினார்.
"ஓய்வு நேரம் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, ஓட்டுநர்களுக்காக ஒரு ஓய்விடத்தை அமைக்க நான் திட்டமிட்டுள்ளேன். அடுத்த சேவைக்குக் காத்திருக்கும் போது, அவர்கள் ஓய்வெடுக்க ஒரு இடம் தேவைப்படுகிறது. இந்த முயற்சி செயல்படுத்தப்படும்," என்றார் அவர்.
இதற்காக சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நிரந்தர அல்லது தற்காலிகக் கட்டமைப்பை அமைப்பது உட்பட, திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் (DBKL) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு ஃபாமி ரொக்கப் பங்களிப்பையும் வழங்கினார்.




