புத்ராஜெயா, ஆகஸ்ட் 5: ஜகார்த்தாவில் மலேசியா ஏர்லைன்ஸ் துணை விமானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் விமான நிலையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையத்தில், தற்போதைய விமானப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து போலீஸ் அதிகாரிகளையும் பணியமர்த்தும் நடவடிக்கையும் அதில் அடங்குமென அரசாங்க ஊடகப் பேச்சாளரான டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
விமானிகள் மற்றும் துணை விமானிகளுக்கான பின்னணி மற்றும் சுகாதார பரிசோதனை நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு மலேசிய விமான போக்குவரத்து குழுமம் (MAG) கேட்டுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அனைத்து பாதுகாப்பு பலவீனங்களை உடனடியாக சரிசெய்யும்படி போலீஸ் துறைக்கும் மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு - பாதுகாப்பு அமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
"ஜகார்த்தாவில் மலேசியா ஏர்லைன்ஸ் துணை விமானி கைது செய்யப்பட்டது குறித்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் மூலம் அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பாஹ்மி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் 39 வயதான மலேசிய விமானி கைதானார்.
அவரது பயணப் பையை சோதனையிட்ட இந்தோனேசிய சுங்கத்துறை அதிகாரிகள் 15 பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70,114 எக்ஸ்டசி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.









