கோம்பாக், பிப் 26- மக்களின் தேவைகளை முறையாகப் பூர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு திட்டமும் கொள்கையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய உள்ளூர் தலைவர்களும் அரசாங்க அமைப்புகளும் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் மக்களின் ஆதரவும் மரியாதையும் அடித்தளமாக விளங்குவதால், பொதுமக்களின் நம்பிக்கையே ஒரு சிறந்த நிர்வாகத்தின் மிகவும் மதிப்புமிக்க சொத்து என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய காலகட்டத்தில் தகவல் தொடர்புச் சூழல் மிகவும் வேகமாகவும் கணிக்க முடியாததாகவும் இருப்பதால், 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சவால்களை விட இன்றைய சவால்கள் முற்றிலும் மாறுபட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
குப்பை மேலாண்மை, வெள்ளப் பேரிடர் மற்றும் சமூக நலன் போன்ற விவகாரங்களுக்கு முழுமையான தீர்வு காண வேண்டுமானால், ஒவ்வொரு துறையும் தனித்தனியாகச் செயல்படாமல் ஒருங்கிணைந்த முறையில் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
நேற்று இரவு தாமான் ஸ்ரீ கோம்பாக்கிலுள்ள தேவான் பெரிங்கினில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நிர்வாகத்தில் நேர்மை மற்றும் மனத்தூய்மை இல்லையென்றால் அந்த நிறுவனம் சமூகத்தின் மரியாதையை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் உள்ள அனைவரும் ஒரு வலுவான குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களின் நலனைப் பாதுகாக்க முடியும் என அவர் மீண்டும் ஒருமுறை உறுதிபடத் தெரிவித்தார்.








