கோலாலம்பூர், பிப் 25 - சீன விளையாட்டு வீரர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வுஷூ போட்டியில் பங்கேற்ற ஒரே இந்திய பெண் வீராங்கனை என தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, உலக அரங்கில் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் ஜஸ்மின் அலக்கின் சாதனையை ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் புகழ்ந்தார்.
"ஒருமைப்பாட்டு அமைச்சின் சார்பாக அவருக்கு சில அங்கீகாரம், உதவிகள் மற்றும் மேலும் இந்த விளையாட்டு மற்றும் தற்காப்பு துறையில் சிறந்து விளங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கு எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் கண்டிப்பாக செய்வோம்", என்றார் அவர்.
சீனாவில் நடைபெற்ற 9-ஆவது உலக குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு, உலகளாவிய வுஷூ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள ஜஸ்மினை நேரில் சந்தித்து, யுனேஸ்வரன் தமது பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது தங்கம் வென்ற வுஷூ வீராங்கனைக்கு, அவர் நற்சான்றிதழையும் உதவித்தொகையையும் வழங்கினார்.
இதனிடையே, இவ்வாண்டு நடைபெற்றவுள்ள சுக்மா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்வதையே தமது அடுத்த இலக்காகக் கொண்டிருப்பதாக, ஜஸ்மின் கூறியிருந்தார்.
பெர்னாமா







