கோலாலம்பூர், ஏப்ரல் 17 - நேற்று பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஒரு தங்கக் கடையில் துப்பாக்கி ஏந்திய இருவர் உட்பட நால்வர் கொண்ட கும்பல் நடத்திய கொள்ளையில், சுமார் ரிம9.75 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்று காலை சுமார் 11 மணியளவில் நடந்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபடில் மர்சுஸ் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் அனைவரும் கடைக்குள் புகுந்து 21 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட மொத்தத் தங்கத்தின் எடை சுமார் 15 கிலோகிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"அடையாளம் தெரியாத, இரண்டு துப்பாக்கிகளை ஏந்திய நான்கு சந்தேக நபர்கள் கடைக்குள் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் பாதுகாப்பு அதிகாரியின் ஒரு துப்பாக்கி (shotgun) மற்றும் ஒரு தோட்டாவையும் திருடிச் சென்றுள்ளனர்," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆயுதமேந்திய கும்பல் கொள்ளைக்காகக் குற்றவியல் சட்டத்தின் 395/397 பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், பிரிக்பீல்ட்ஸ் காவல்துறை ஹாட்லைன் 03-2297 9222 அல்லது கோலாலம்பூர் காவல்துறை ஹாட்லைன் 03-2115 9999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








