ஜோகூர் பாரு, பிப் 25 - 'பந்துவான் காசிஹ் ஜோகூர்' (BKJ) உதவித்தொகை தொடர்பில் பரவிவரும் மோசடி நடவடிக்கைகள் குறித்து மாநில மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி நினைவூட்டினார்.
BKJ தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும் ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
எனவே, மக்கள் எப்போதும் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைச் சொடுக்கவோ அல்லது அங்கீகரிக்கப்படாத தரப்பினரிடம் தங்களது தனிப்பட்ட விவரங்களைப் பகிரவோ வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
"மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் முகங்களையும் குரல்களையும் பிரதிபலிக்கச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றுவதாகச் சந்தேகிக்கப்படும் 12 டிக்டாக் கணக்குகள் குறித்து காவல்துறை வெளிப்படுத்திய தகவலைத் தாம் தீவிரமாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
"இதுவொரு பொறுப்பற்ற, திட்டமிடப்பட்ட குற்றச் செயலாகும். இந்த மோசடிக் கும்பல், மாநிலத் தலைவர்களின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதோடு, அரசாங்கத்தின் சின்னத்தையும் அடையாளத்தையும் பயன்படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் அவர்களின் தொலைபேசி எண்கள், அடையாள அட்டை எண்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சிக்கிறது" என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
மக்களின் நலனை வைத்து விளையாடும் எந்தத் தரப்பினருடனும் தமது தரப்பு சமரசம் செய்து கொள்ளாது என்று ஓன் ஹஃபிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட கணக்குகளுக்குப் பின்னணியில் உள்ள உள்ளவர்களைக் கண்டறிய மலேசிய அரசக் காவல்துறையுடன் இணைந்து செயல்படும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு (MCMC) அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
"இணையக் குற்ற அச்சுறுத்தல்களிலிருந்து ஜோகூர் மக்களின் நலனையும் பாதுகாப்பையும் நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஜோகூர் மாநில மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், செரோம் சட்டமன்ற உறுப்பினருமான கைரின்-நிசா இஸ்மாயில்@எம்டி ஓன் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்ததை ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ ஏ.பி. ரஹ்மான் அர்சாட் உறுதிப்படுத்தினார்.
இந்தக் கணக்குகள் வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியால் இதுவரை யாரும் பணத்தை இழந்ததாகப் புகார் அளிக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட தகவல்களைத் திருடும் முயற்சி நடந்துள்ளது. குற்றவியல் சட்டப்பிரிவு 420/511 மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
'பந்துவான் காசிஹ் ஜோகூர்' (BKJ) உதவித்தொகை மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
25 பிப்ரவரி 2026, 1:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
DUN Johor bubar secara rasmi Semalam
Kathiravan Manoharan
2 ஜூன் 2026

national
ஜோகூர், நெகிரி செம்பிலானில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் தயார்
Shalini Rajamogun
18 மே 2026

national
பள்ளி மாணவி உயிரிழப்பு: வேன் ஓட்டுநருக்கு மூன்று நாட்கள் தடுப்புக்காவல்
Shalini Rajamogun
6 மே 2026

national
இரண்டாம் ஆண்டு மாணவி வேன் மோதி உயிரிழப்பு – ஓட்டுநர் கைது
Shalini Rajamogun
6 மே 2026

உங்கள் கருத்து என்ன?




