குவாந்தான், பிப் 24 - சமூக ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்குப் பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா, அரசாங்க நிதி உதவி வழங்குவதாகப் பரப்பப்படும் செய்திகளைப் பகாங் அரண்மனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுல்தானின் முகத்தை உருமாற்றி உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் மீண்டும் வலம் வருவதை ‘கெசுல்தானான் பகாங்’ முகநூல் பக்கம் வாயிலாக அரண்மனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கியமாக, இத்தகைய போலி காணொளிகளைப் பொதுமக்கள் பகிர வேண்டாம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய இணைப்புகள் அல்லது தகவல்களை நம்பாமல் உடனடியாகப் புகாரளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பகாங் சுல்தானுக்கு எனத் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் ஏதுமில்லை என்பதோடு, அவரது அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் சுமார் 758,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட ‘Kesultanan Pahang’ முகநூல் பக்கத்தின் வாயிலாகவே அறிவிக்கப்படுகின்றன.
அதேவேளையில், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற பிற தளங்களில் ‘Kesultanan Pahang’ என்ற பெயரிலும், அதிகாரப்பூர்வ இணையதளம் ‘istanapahang.my’ என்ற முகவரியிலும் மட்டுமே அரண்மனை தகவல்கள் பகிரப்படுகின்றன.
மோசடி கும்பலின் இத்தகைய ஏமாற்று வேலைகளுக்குப் பலியாகாமல் இருக்கப் பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.








