கோத்தா கினபாலு, 23 பிப் -- சபா கடல் பகுதியில் இன்று நள்ளிரவு 12.57 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இருப்பினும் அதனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை.
மலேசிய வானிலை ஆய்வுத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், நிலநடுக்கத்தின் மையம் 7.0 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 116.4 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில், 678 கிலோமீட்டர் (கி.மீ) ஆழத்தில் அமைந்திருந்தது என்று தெரிவித்தது.
"நிலநடுக்கத்தின் மையம் சபா, கூடாட்டிலிருந்து 49 கி.மீ மேற்கே அமைந்துள்ளது." "இந்த நில அதிர்வுகள் சபா மற்றும் சரவாக், தீபகற்ப மலேசியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
நிலைமையை அவ்வப்போது தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
நில அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் https://forms.gle/bRkJBUqLEPAf8KVw9 என்ற இணைப்பின் மூலம் கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்து தகவல்களை வழங்குமாறு அந்தத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், பெர்னாமா தொடர்பு கொண்டபோது, சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்களும் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
"இதுவரை, நிலநடுக்கம் தொடர்பான அவசர அழைப்புகள் எதுவும் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."







