ஷா ஆலம், பிப் 22: இங்குள்ள செக்ஷன் 3-இல் கேபிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு குழுவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இரவில் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி பலர் கேபிள்களைத் திருடுவதைக் காட்டும் 14 வினாடி வீடியோ பதிவு வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், அப்பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய ஒருவர் இந்த சம்பவத்தை நேரில் கண்டதாக ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் ராம்சே எம்போல் தெரிவித்தார்.
“சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இழப்பின் மதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றார்.
தண்டனைச் சட்டப்பிரிவு 379 இன் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என ராம்சே தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் இன்ஸ்பெக்டர் முகமட் சம்ரி அப்துல் ரஹ்மானை 0111-6652402 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது கேபிள் திருட்டுகள் குறித்து, அவசர தொலைபேசி எண் 999 மூலம் உடனடியாக தெரிவிக்குமாறும் காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.








