கோலாலம்பூர், பிப் 19: ஜிஞ்சாங் பகுதியில் உள்ள பல வங்கி கிளைகளில் தானியங்கி பண இயந்திரங்களின் திரைகளை உடைத்து சேதப்படுத்தியதாக நம்பப்படும் 65 வயதுடைய முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செந்துல் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பஸ்ரி சாகோனி இது குறித்து கூறுகையில், உள்ளூர்வாசியான அந்த சந்தேக நபர் மாலை 3.21 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்றும், அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், ஆடைகள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த முதியவர் கல்லை கொண்டு இயந்திரத்தின் திரைகளை உடைத்தது தெரியவந்தது.
இந்த கைது நடவடிக்கை மூலம், அப்பகுதியில் இதற்கு முன் புகாரளிக்கப்பட்ட ஐந்து ஏடிஎம் சேத வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் RM64,000 மதிப்பிலான சொத்து சேதத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.


