கோலாலம்பூர், பிப் 19: ரமலான் மாதத்தில் வெறும் நோன்பு கடமைகளை நிறைவேற்றுவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அதன் ஆழமான ஞானத்தையும் ஷரியா நோக்கங்களையும் புரிந்து கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த புனித மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் வெறும் பலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், ஒருவரின் தனிப்பட்ட இச்சைகளை கட்டுப்படுத்தும் 'முஜாஹதா' உணர்வால் தூண்டப்பட வேண்டும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதே வேளையில், ரமலான் மாதம் சுய ஒழுக்கத்தை வலுப்படுத்தவும், அன்றாடக் கடமைகளையும் பொறுப்புகளையும் முழுமையான அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் ஆற்றுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நோன்பு என்பது ஒருவரின் குணநலன்களை மேம்படுத்தும் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை இந்த புனிதமான ரமலான் மாதத்தை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இன்று முதல் நோன்பைத் தொடங்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


