கோலாலம்பூர், மே 12: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திரைத்துறையில் பல ஆண்டுகளாகத் தங்களது அபிமானக் கலைஞர், ஊழல்வாதிகளையும் சமூக விரோதிகளையும் மூன்று மணி நேரத்திற்குள் வீழ்த்துவதை அவரது ரசிகர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
"திரை பிம்பத்தையும் கடந்து, இன்று தமிழக மக்கள் அவரிடம் ஒரு மகத்தான பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். 'ஒரு விரல் புரட்சி' என்பது வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல், தற்போது தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கும் தருவாயில் உள்ளது," என பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், மலேசியாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் ஆழமான வரலாற்று, பண்பாட்டு மற்றும் மக்கள் ரீதியிலான உறவுகள் மிகவும் வலுவானவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தனித்துவமான பிணைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், வருங்காலங்களில் முதலமைச்சர் விஜய் அவர்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற தாம் ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.








