செமினியில் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்குச் சொந்தமான மின்கம்பிகளைத் திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் நால்வரை காவல்துறை தேடி வருகிறது. இச்சம்பவம் நேற்று செமினி, டி'காயாங்ஙான் செத்தியா எகோஹில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை சுமார் 6.54 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், சந்தேக நபர்களின் செயலைக் கண்ட அப்பகுதிவாசிகள் அவர்களைக் கண்டித்ததால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இது குறித்து காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறுகையில், இச்சம்பவம் குறித்து அதே நாளில் தங்களுக்குப் புகார் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத நான்கு சந்தேக நபர்களும் சாம்பல் நிற வாகனத்தைப் பயன்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
"சந்தேக நபர்கள் அப்பகுதியில் டிஎன்பி-க்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் மின்கம்பிகளை வெட்டிக் கொண்டிருந்தது காணப்பட்டது. இருப்பினும், அப்பகுதிவாசிகள் கண்டித்தவுடன் அக்கும்பல் தப்பி ஓடியது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
கிடைத்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
"மின்கம்பிகளை வெட்டி சேதம் விளைவித்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டப் பிரிவு 431A-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது."
"இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி சார்ஜென்ட் நட்ஸுல் மஜ்டி அபு செமானை 017-4661 757 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவலாம்," என்று அவர் கூறினார்.


