புத்ராஜெயா: மார்ச் 30; கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (கேஎல்ஐஏ) பகுதியில் நேற்று மாலை ஹோண்டா சிவிக் ரக காரை ஓட்டிச் சென்ற ஆடவரைத் துரத்திச் சென்ற போலீசார், அவரை வெற்றிகரமாகக் கைது செய்தனர். அந்த ஆடவருக்கு 31 குற்றவியல் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மாலை 4.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், 30 வயதான அந்த சந்தேக நபர், போலீஸ் ரோந்துக் குழுவினரிடமிருந்து (MPV) தப்பிப்பதற்காகப் பல பொது வாகனங்கள் மீது மோதியதாக கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் எம். ரவி தெரிவித்தார்.
"கேஎல்ஐஏ பகுதியில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ரோந்துக் குழுவினர், சிவப்பு நிற ஹோண்டா சிவிக் காரை நிறுத்த முயன்ற போது, அதன் ஓட்டுநர் சோதனைக்காக நிறுத்த மறுத்துவிட்டார்," என்று அவர் கூறினார்."அந்த ஓட்டுநர், கேஎல்ஐஏ முனையம், தளம் 3-ஐ நோக்கித் தப்பிக்க முயன்றபோது, அப்பாதையில் இருந்த ஐந்து பொது வாகனங்கள் மீது மோதினார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு அருகிலேயே அவர் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.மேற்கொண்ட சோதனையில், அந்த ஆடவருக்கு 31 குற்றவியல் பதிவுகளும், போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு போதைப்பொருள் தொடர்பான பதிவும் இருப்பது தெரிய வந்தது.
அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் சேதம் விளைவித்த குற்றங்களுக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 186 மற்றும் 427-இன் கீழும், அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 15(1) மற்றும் தொடர்புடைய போக்குவரத்து விதி மீறல்களின் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப் படுகிறது என்று ரவி கூறினார்.
தடுப்புக் காவல் உத்தரவு பெறுவதற்காக சந்தேக நபர் இன்று சிப்பாங் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.நேற்று, கேஎல்ஐஏ-வில் போலீஸ் கார் ஒன்று மற்றொரு காரைத் துரத்திச் செல்லும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.








