கூச்சிங், பிப் 9: கட்டணம் வசூலிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் போலி பராமரிப்பு இல்லங்கள் (rumah kebajikan palsu) தொடர்பான மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான நான்சி, அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பராமரிப்பு இல்லங்கள் சேர்க்கைக்காக எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பதில்லை என்று தெரிவித்தார்.
பராமரிப்பு இல்லங்களில் சேர விரும்பும் நபர்களுக்கு சில தகுதி நிபந்தனைகள் இருப்பினும், கட்டணம் செலுத்துவது அவற்றில் ஒன்றல்ல என்றும் அவர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்ட நான்சி, சமீபத்தில் ஒருவர் தன்னை தொடர்புகொண்டு, பராமரிப்பு இல்லத்தில் சேர கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறும் விளம்பரம் குறித்து கேட்டதாக தெரிவித்தார்.
இதேபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குறித்து கவலை தெரிவித்த நான்சி, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
எனவே, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தளங்கள் மூலம் தகவல்களை உறுதிப்படுத்தவும், சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் அல்லது தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்கவும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.


