கிள்ளான், பிப் 8 - மீன்களைக் குறைந்த விலையில் வாங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
மீன்கள் தீபகற்பத்தில் உள்ள சந்தைகளைக் காட்டிலும், குறைந்த விலையில் விற்கும் சபா மாநிலத்திலிருந்து கொண்டு வருவதற்கான வழிகளைத் தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை தீபகற்பத்தில் மீன்களை மலிவு விலையில் சந்தைப்படுத்துவதை உறுதி செய்வதோடு சபா மாநிலத்தில் உள்ள உள்ளூர் மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.
இந்த திட்டம் தொடர்பாக மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்துடன் தீவிர கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், விமான நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவிருப்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் சொன்னார்.
பெர்னாமா


