ஷா ஆலம், பிப் 7: மூவார், தாமான் சுங்கை அபோங் பகுதியில் உள்ள ஒரு அழைப்பு மையத்தின் மூலம் செயல்பட்டு வந்த போலி தனிநபர் கடன் மோசடி கும்பலை நேற்று போலீசார் முறியடித்தனர். இந்த அதிரடி சோதனையில் மூன்று பெண்கள் உட்பட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். புலனாய்வு மற்றும் பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் மூவார் மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டதாகத் மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 25 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்த நபர்கள், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த மோசடி மையத்தை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் தங்களை நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு, தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கான பிரத்யேக வசனங்களைப் பயன்படுத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சோதனையின் போது 20 கைபேசிகள், மடிக்கணினிகள், இணைய மோடம்கள் மற்றும் ஏமாற்று வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வசனங்கள் அடங்கிய குறிப்பேடுகள் என மொத்தம் RM10,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள மக்களைக் குறிவைத்து மோசடி செய்து வந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பலில் இவர்கள் ஒரு பகுதியினர் என்று ராயிஸ் முக்லிஸ் கூறினார். கைது செய்யப்பட்ட அனைவரும் திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுவர் என்று ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி 4 முதல் வியாழக்கிழமை வரை, மின்-வணிக மோசடி மற்றும் வங்கி கணக்கு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு RM190,000-க்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


