கோலாலம்பூர், பிப் 6 - ஜோகூரிலிருந்து தினமும் எல்லை தாண்டி சென்று சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்குக் காப்பீடு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய புதிய காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுமார் 400,000 மலேசியர்கள், வேலை நேரத்திற்குப் பிறகு சமூகப் பாதுகாப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதை இந்தப் புதிய திட்டம் உறுதி செய்யும்.
கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்றும் ரமணன் கூறினார். 'சிங்கப்பூரில் பணிபுரிகிறார்கள் என்பதற்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது. நீங்கள் மலேசியாவைச் சேர்ந்தவராக இருக்கும் வரை, பாதுகாப்பு உங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன், என அவர் கூறினார்.
சுமார் 11 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான மலேசியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 300,000 முதல் 400,000 பேர் தினமும் எல்லை கடந்து பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் (ILO) தரநிலைகளுக்கு ஏற்ப 26 தொடர்புடைய சட்டங்கள் திருத்தப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை (SIP) சட்டத் திருத்தம் 2025 இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் ரமணன் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையினரின் கருத்துக்களைப் பெற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் (Moratorium) வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். "நாங்கள் தொழிலாளர்களுக்கு உதவும் அதே நேரத்தில் முதலாளிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் அதிகமாக நெருக்கப்பட்டால், தொழிலாளர்கள் வேலையை இழக்க நேரிடும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பெர்னாமா


