ஷா ஆலம், பிப்ரவரி 5 — கோலாலம்பூர், டெசா பண்டானில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் ஒருவரால் 13 வயதுடைய ஆண் மாணவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தாக கூறப்படும் புகார் குறித்து தங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மதியம் 12.27 மணி அளவில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை இந்தப் புகாரைச் செய்ததாக வங்சா மாஜு மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார். அந்த ஆசிரியர் தனது மகனுக்குத் தெரிந்தவர் என்றும், அவர் பலமுறை தனது மகனை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தாகப் புகார்தாரர் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
விசாரணைக்கு உதவும் வகையில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்றும், 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 14(டி)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார். மேலும், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்தச் சந்தேக நபருக்கு ஏற்கனவே வெவ்வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகள் விதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக முகமட் லாசிம் தெரிவித்தார்.


