ஷா ஆலம், பிப். 5: புஞ்சாக் ஆலம் பகுதியில் உள்ள குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவரின் வீட்டில், மூன்று மாதப் பெண் குழந்தை சுயநினைவின்றி இருந்ததன் தொடர்பில் காவல்துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான புகார் கடந்த ஜனவரி 29ஆம் தேதி இரவு 11.12 மணிக்குப் பெறப்பட்டதாகக் கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர், சூப்பிரிண்டெண்ட் அசஹாருடின் தாஜுடின் தெரிவித்தார்.
புஞ்சாக் ஆலம், ஆலாம் பெர்டானா பகுதியில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைப் பராமரிப்பாளர் வீட்டில், தனது மகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அக்குழந்தை வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டபோது, சுயநினைவின்றி இருந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, அக்குழந்தை ஆரம்ப சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், குழந்தை மேல் சிகிச்சைக்காக UiTM புஞ்காக் ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் காவல்துறை விசாரணை அறிக்கையைத் திறந்ததாக அசாஹருடின் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான தகவல்களைக் கொண்ட பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கோல சிலாங்கூர் மாவட்டக் காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறையை 03-3289 1222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்தையும் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கலாம்.


