ஷா ஆலம், பிப் 4: பந்திங், சுங்கை கெலாம்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள சுமார் நான்கு ஹெக்டர் பரப்பளவிலான காட்டுப் பகுதி இன்று நண்பகல் தீப்பிடித்து எரிந்தது.
நண்பகல் 12.43 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து பந்திங் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஏழு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு அதிகாரி ஹம்தான் ஹம்ஸா தெரிவித்தார். மதியம் 1.03 மணியளவில் அங்கு சென்றடைந்தபோது, சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான வனக்காப்பகப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதைச் செயல்பாட்டுத் தளபதி உறுதிப்படுத்தியதாக அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து சிலாங்கூர் மாநில வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் கால்வாய் தோண்டும் இயந்திரங்களை அனுப்பி வைப்பதோடு, தீ விபத்து பகுதிக்கு அருகிலுள்ள குழாய்கள் மற்றும் கிணறுகளையும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவார்கள் என்று அவர் கூறினார். எனினும், போதிய நீர் இல்லாமை மற்றும் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கான சாலை வசதிகள் இல்லாத காரணத்தினால், தீயை அணைக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்படும் என்று ஹம்தான் மேலும் தெரிவித்தார்.


