குவாலா லங்காட் , ஆகஸ்ட் 15 – தேசிய மாதத்தை ஒட்டி, பந்திங்கைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இன்று காலையில் ஜுக்ரா மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
' மெர்டேகா எழுச்சி: புக்கிட் ஜுக்ரா மலையேற்றம்' (Semarak Merdeka: Hike Bukit Jugra) என்ற திட்டத்தில் பங்கேற்ற அவர்கள் அனைவரும் இன்று காலை 6.30 மணியளவில் மலையேறத் தொடங்கினர்.
இத்திட்டம் தேசபக்தி உணர்வை வளர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், சமுதாயத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு தளமாகவும் அமைந்தது என பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பாராயுடு தெரிவித்தார்.
"புக்கிட் ஜுக்ரா உச்சியினை நோக்கிய பயணத்தின் போது, சுல்தான் அப்துல் சமாட் அரச குடும்ப நினைவகம் (Kompleks Makam Diraja Sultan Abdul Samad), புக்கிட் ஜுக்ரா கலங்கரை விளக்கம் (Rumah Api Bukit Jugra) மற்றும் ஜுக்ராவைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தளங்களையும் பாரம்பரியக் கட்டடங்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இந்த தனித்துவமான பாரம்பரியம், புக்கிட் ஜுக்ரா ஒரு பொழுதுபோக்கு தளம் மட்டுமல்ல, சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் வரலாற்றில் மிக முக்கியமான மதிப்பைக் கொண்டுள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது," என்று பாப்பராய்டு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

இந்த மலையேற்றத் திட்டம் குவாலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் (MPKL) மண்டலம் 14-இன் நகராண்மைக் கழக உறுப்பினர், மண்டலம் 14-இன் இளைஞர் மற்றும் விளையாட்டு அதிகாரி (PeBS), கம்போங் சுங்கை மாங்கிஸ் கிராம வளர்ச்சி-பாதுகாப்பு குழு (JPKK) மற்றும் கம்போங் ஸ்ரீ சீடிங் கிராம வளர்ச்சி-பாதுகாப்பு குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
இந்த மலையேற்றத்தில் குவாலா லங்காட் மாவட்ட, நில அதிகாரி துங்கு ரொஹானா துங்கு நவாவி, சமுதாயத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் மோரிப் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மலையேற்றத்தை வெற்றிகரமாக முடித்த அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் பாப்பாராயுடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதோடு, பல்லின சமூகத்தில் இதுபோன்ற ஒற்றுமை, ஒருமைப்பாட்டு உணர்வுகளை தொடர்ந்து வளர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.







