தாய் கொலை வழக்கு: சிலாங்கூர் நோக்கிச் சென்ற பேருந்தில் சந்தேக நபர் கைது

3 பிப்ரவரி 2026, 7:40 AM
தாய் கொலை வழக்கு: சிலாங்கூர் நோக்கிச் சென்ற பேருந்தில் சந்தேக நபர் கைது

ஷா ஆலாம், பிப் 3: கெடா, அலோர் ஸ்டாரில் தனது தாயைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர், நேற்று இரவு சிலாங்கூருக்குச் செல்லும் வழியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வங்கி ஒன்றின் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 52 வயதுடைய சாருலைல் பசிர் என்பவர், நேற்று ஜாலான் தஞ்சோங் பெண்டஹாராவிலுள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் வீடமைப்பில் உள்ள அவரது வீட்டில் கத்திக் குத்திக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த அவரது 28 வயது மகன், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாகக் கோத்தா ஸ்டார் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் சையத் பஸ்ரி சையத் அலி தெரிவித்தார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய திசையில் ஒரு சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்தபோது, நேற்று இரவு 8.34 மணியளவில் அந்த இளைஞர் பிடிபட்டார். "நேற்று நகரில் நடந்த 52 வயதுப் பெண்ணின் கொலைச் சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஏற்கனவே ஒரு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்தது. இருப்பினும், அவரது சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகிக்கப்படும் அந்த இளைஞர் இன்று அலோர் ஸ்டார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளையோ அல்லது தவறான தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்று மலேசியக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புலனாய்வுப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.