கோலாலம்பூர், ஜனவரி 30: மலேசியத் தமிழர்களின் "தாய் வீடு" என்று போற்றப்படும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் ஏறி பத்துமலை திருத்தலம் நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார்.

இன்று சுமார் 7.30 மணியளவில் நித்திய பூஜையுடன் தொடங்கிய இவ்விழாவில், விசேஷ ஷோடச உபசாரங்களுடன் ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" எனும் முழக்கங்களுக்கு இடையே, இரவு சுமார் 8.30 மணியளவில் முருகப்பெருமான் வெள்ளி ரதத்தில் எழுந்தருளினார்.
பக்தர்களின் அர்ச்சனை மற்றும் வழிபாடுகளுடன், மேள தாளங்கள் முழங்க கோலாகலமாகத் தொடங்கிய இந்த ரத ஊர்வலம், பத்துமலை திருத்தலத்தை நாளை சென்றடையும்.
இதன் மூலம் மலேசியாவின் பிரம்மாண்ட தைப்பூசத் திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.



