கோலாலம்பூர், ஜன 28- எதிர்வரும் சீனப் புத்தாண்டு முதல், நாட்டின் போக்குவரத்து முறையை வலுப்படுத்தும் நோக்கிலும் மக்களுக்கு நேரடி பலன்களை வழங்கும் வகையில், மின்சார ரயில் சேவை (ETS) பருவகால அடிப்படையில் 24 மணிநேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இது குறித்து தெரிவிக்கையில், மலேசியத் தீபகற்பத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் அடிக்கடி, நெகிழ்வான மற்றும் வசதியான பயணத்தை மேற் கொள்வதை உறுதி செய்ய, இடிஎஸ் சேவைகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36-லிருந்து 46-ஆக அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
புத்ரா ஜெயாவில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த 24 மணி நேர சேவை சீனப் புத்தாண்டு, பிற முக்கியப் பண்டிகைகள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் மட்டுமே அமல்படுத்தப்படும் என்று விளக்கினார்.
அதிக தேவையுள்ள காலங்களில் இருக்கும் சொத்துக்களை முழுமையாக பயன்படுத்தி, பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இடிஎஸ் சேவை, தற்போது கேடிஎம்பி (KTMB) நிறுவனத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதால், இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


