கோத்தா பாரு, ஜன 27: கோல கிராய், குவா இகானில் உள்ள ஹிடாயா யாகின் நிறுவனத்திற்கு சொந்தமான செம்பனைத் தோட்டத்தில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் இரும்புப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இப்பொருள் குறித்த தகவல் டாபோங் காவல் நிலையத்திற்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்ததாகக் கோலா கிராய் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் மஸ்லான் மாமட் தெரிவித்தார். பின்னர், பாதுகாப்புக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள காவல்துறை குழு ஒன்று அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதி பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டதோடு ஆரம்ப விசாரணையை மேற்கொள்ள கிளந்தான் காவல்துறையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுக் குழுவும் அந்த இடத்தில் இருந்ததாக அவர் கூறினார்.
“விசாரணையின் முடிவின் அடிப்படையில், அந்தப் பொருள் சுமார் 58 சென்டிமீட்டர் நீளம் கொண்ட வான்வழி வகை வெடிகுண்டு “ஏர் டிராப் குண்டு” என்று கண்டறியப்பட்டது.
“பொதுச் சொத்துக்களுக்கு சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படாத வகையில் அந்த பொருள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
வெடிபொருட்களைப் போன்று ஏதேனும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு மஸ்லான் மாமட் அறிவுறுத்தினார்.


