பட்டர்வெர்த், ஜன 26 - நாட்டில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், சீனியை உணவில் சேர்த்துக் கொள்வதைக் குறைக்க நாடு தழுவிய அளவில் ஒரு நிலையான பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசியாவிலேயே அதிக சர்க்கரை நுகர்வை கொண்ட நாடுகளில் மலேசியாவும் இடம்பெற்று உள்ளதால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகள் பொது சுகாதாரத்திற்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன என்று அன்வார் கூறினார். அதனால், சீனியை உணவில் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளும்படி அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த சனிக்கிழமை, செபெராங் ஜெயா மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றியபோது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அரசாங்கம் அதிகமாக செலவிட்டாலும்,மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் இருக்க ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மருத்துவமனைகளிலும் அரசாங்க வளாகங்களிலும், ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களை வழங்குவது உட்பட, சீனியைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
மருத்துவமனைகளில் வழங்கப்படும் அனைத்து பானங்கள் மற்றும் உணவுகளிலும் குறைவான சீனி பயன்பாடு இருப்பதை உறுதி செய்யுமாறும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெளிவான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் சுகாதார அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.


