செலாயாங், ஜன 23- மலேசியத் திருநாட்டில் புகழ்பெற்ற பத்துமலைத் திருத்தலத்தில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டில் புகழ்பெற்ற Spritzer நிறுவனம் கிளீன் தைப்பூசத்தை மேற்கொண்டு வருகிறது.

இது வெறும் சுத்தத்தை மட்டும் அல்லாமல், நீண்டகால சுற்றுச்சூழல் பொறுப்பை நோக்கி உறுதியான முன்னேற்றத்தை குறிக்கிறது.
இன்று பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த ஆண்டுகளாக சமூகத்திற்கு சேவை செய்து வரும் கிளீன் தைப்பூச இயக்கத்தின் புதிய கட்டமாக, ஸ்பிரிட்சருடன் ஒரு மூலோபாய கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளீன் தைப்பூசத்தின் தாக்கம் ஏற்கனவே தெளிவாக காணப்படுகிறது. 2025 தைப்பூச விழாவின் போது, நூற்றுக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் உதவியுடன், 320 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகள் வெற்றிகரமாக சுத்தம் செய்யப்பட்டது.
முந்தைய ஆண்டுகளில் தைப்பூசத்தின் போதும் அதன் முன்னர், மற்றும் பின்பும் சுத்தத்தைப் பாதுகாப்பதே முக்கியமாக இருந்தது.
ஆனால் கிளீன் தைப்பூசம் 2026, சுற்றுச்சூழல் பாதுகாப்பை பண்பாடும் ஆன்மீக மதிப்புகளின் ஒரு பகுதியாகக் கருதும் ஆழமான மாற்றத்தை குறிக்கிறது என்று ஒற்றுமை துறை துணையமைச்சர் மாண்புமிகு யுனேஸ்வரன் ராம்ராஜ் தெரிவித்தார்.
இன்று பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளீன் தைப்பூசம் ஏற்பாட்டாளர் விக்னேஸ்வரன் கலியபெருமாள் மற்றும் Spritzer நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி Shoao Chan கலந்து சிறப்பித்தனர்.


