பத்துகேவ்ஸ், பிப் 5- பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் முறையான கிராம வசதி மேம்பாடுகளுடன் மேம்படுத்துவதை உறுதிப்படுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியன் செட்டில்மெண்ட் கிராமப் பகுதி மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேம்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் குடியிருப்பாளர்களால் கட்டப்பட்ட சில வீடுகள் சாலை ஒதுக்கீட்டில் அமைந்துள்ளன.
இந்நிலையில் பத்து கேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் கிராம மேம்பாட்டு திட்டத்திற்கு இடையூறாக உள்ள 44 குடியிருப்பாளர்களுக்கு வீடுகள் கட்டி தர சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
அவ்வகையில் இன்று காலையில் கோம்பாக் மாவட்ட நில அலுவலகமும் தேசிய வீடமைப்பு நிறுவனமும் இணைந்து சம்பந்தப்பட்ட 44 குடியிருப்பாளர்களுக்கு விளக்கவுரை கூட்டத்தை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் இந்தியன் செட்டில்மெண்ட் கிராம மேம்பாடு தொடர்பான நிலவரங்கள், வீடுகள் கட்டி தருவதற்கான ஏற்பாடுகள், அதன் விண்ணப்ப முறைகள் மற்றும் கிராம மேம்பாட்டின் காரணங்கள் குறித்து 44 குடியிருப்பாளர்களுக்கு முறையாக விளக்கம் அளிக்கப்பட்டது.

கூடுதலாக, கோம்பாக் மாவட்ட அலுவலகம், கூட்டரசு அரசாங்கத்திற்குச் சொந்தமான Syarikat Perumahan Negara Berhad நிறுவனத்துடன், குடியிருப்பாளர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய செலவு மற்றும் கட்டண முறையுடன் மிகவும் வசதியான வீடுகளை மீண்டும் கட்டுவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்குச் சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் துவான் ரஹிம் கஸ்டி அவர்கள் கலந்து கொண்டு கிராம மேம்பாடு தொடர்பாக விளக்கவுரையை வழங்கினார்.
ஏற்கனவே கடந்தாண்டு டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடந்த கூட்டத்தில், காலி செய்யப்பட வேண்டிய 44 வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் 2.5 கி.மீ நீளமுள்ள சாலை மேம்பாட்டுக்கு ஒப்புக்கொண்டிருந்தனர்.
குடியிருப்பாளர்கள் இடத்தைக் காலி செய்த பிறகு மேம்பாட்டு காலத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான வாடகை செயல்முறை மற்றும் நிலப் பட்டா உரிமையுடன் பொருந்தக்கூடிய வீடுகளை மீண்டும் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

சாலை, வடிகால், மற்றும் வெள்ளத் தடுப்பு முயற்சிகளை அமைக்கும் காலத்தில் வாடகைச் செலவின் சுமையைக் குறைக்க இந்த 44 குடும்பங்களுக்கும் மாநில அரசு உதவி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர்களுடன் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் கோம்பாக் மாவட்ட அலுவலகம், கூட்டரசு அரசாங்கத்திற்குச் சொந்தமான Syarikat Perumahan Negara Berhad நிறுவனத்துடன், குடியிருப்பாளர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய செலவு மற்றும் கட்டண முறையுடன் மிகவும் வசதியான வீடுகளை மீண்டும் கட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்று அமிருடின் தெரிவித்திருந்தார்.


