ஷா ஆலம், ஜன 21- ஷா ஆலாமில் உள்ள செக்ஷன் 3-இல் ஆட்டிசம் குறைபாடுடைய சிறுவன் ஒருவன் ஆடையின்றி அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பராமரிப்பு மையத்தின் மீது விரிவான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அந்த மையத்தின் பதிவு நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
சிலாங்கூர் மாநில மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) அன்ஃபால் சாரி இது குறித்துக் கூறுகையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடம் ஒரு பாலர் பள்ளியா (Tadika) அல்லது இடைக்கால பராமரிப்பு மையமா (Transit Centre) என்பதை உறுதிப்படுத்துவதும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாகும் என்றார்.
இம்மையம் முன்னதாக மாநில கல்வித் துறையின் (JPN) கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது."நாங்கள் அதன் பதிவு நிலையைச் சரிபார்ப்போம். இச்சம்பவம் ஒரு பாலர் பள்ளியில் நடந்திருந்தால், கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
அதுவே ஒரு இடைக்கால பராமரிப்பு மையமாக இருந்தால், அது சமூக நலத்துறையின் (JKM) கீழ் வரும். அத்தகைய சூழலில், அதன் செயல்பாட்டை நிறுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பற்ற முறையில் நடத்தப்படுவதோ அல்லது அவர்களின் நலனுக்குப் பாதிப்பு ஏற்படுவதோ உறுதி செய்யப்பட்டால், அந்த மையத்தை மூடுவதற்குச் சமூக நலத்துறைக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாகத் தாம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரைச் சந்தித்து நலம் விசாரித்திருப்பதாகவும், கடந்த ஆண்டும் இத்தகைய புகார்கள் எழுந்ததாகவும் அன்ஃபால் சாரி சுட்டிக்காட்டினார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சேவையை வழங்குவதாகக் கூறும் இம்மையங்கள், முறையான தகுதியுடைய ஆசிரியர்களைக் கொண்டுள்ளனவா என்பதையும், சிறப்புத் தேவையுடைய குழந்தைகளைக் கையாள்வதற்கான நிபுணத்துவம் அவர்களிடம் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.
தனியார் பாலர் பள்ளி உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்வதோடு, முறையான பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்தகைய மையங்களில் சேர்க்கும் முன், அவை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.



