ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய நிலம்: அரசாங்கம் அறிவிப்பு

19 ஜனவரி 2026, 7:34 AM
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய நிலம்: அரசாங்கம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜனவரி 19 – மடாணி மசூதி (Masjid MADANI) நிர்மாணிப்புத் திட்டத்தினால் இடமாற்றம் செய்யப்படவுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கான புதிய நிலத்தை அரசாங்கம் தயார் செய்துள்ளது.

இந்த விவகாரம் சட்ட ரீதியாகவும், சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையிலும் திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்ற நடவடிக்கையில் எவ்விதத் தொய்வுமின்றி வழிபாடுகள் தொடர்வதை உறுதிசெய்யும் பொருட்டு, ஆலயத்திற்கான அங்கீகாரங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த செப்டம்பர் 17, 2025 அன்று கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஆலயத்தின் கட்டிடத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 5, 2025 அன்று புதிய தளம் அதிகாரப்பூர்வமாக 'இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலமாக' அரசாங்கத்தால் அரசிதழில் (Gazette) பதிவேற்றப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி 14, 2026 அன்று அந்த நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை கூட்டரசு பிரதேச நிலச் செயற்குழு (JKTWPKL) வழங்கியுள்ளது.

இடமாற்றம் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (ஜனவரி 19) நடைபெறுகிறது.

வரவிருக்கும் தைப்பூசத் திருநாளுக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக ஆலயத் தரப்புடன் அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், சுமூகமான முறையில் இடமாற்றப் பணிகள் நிறைவேறுவது உறுதி செய்யப்படும் என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாலிஹா முஸ்தபா மற்றும் முன்னாள் கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ மைமுனா ஷெரீப் ஆகியோரின் சீரிய முயற்சியால் இந்தப் புதிய தளம் சாத்தியமானது.

மேலும், கோலாலம்பூரில் சமய நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்கள் யாப் கோபிந்த் சிங் தியோ, டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

முதிர்ச்சியான மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இந்தப் பிரச்சனை அணுகப்பட்டிருப்பது, கூட்டரசு பிரதேச நிர்வாகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

முன்னதாக, ஆலய விவகாரம் தொடர்பாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.