கோலாலம்பூர், ஜனவரி 18- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உடல்நிலை மிகவும் சீரான நிலையில் உள்ளது. இதன் மூலம், அவர் திட்டமிட்டபடி தனது அனைத்து அதிகாரப்பூர்வப் பணிகளையும் தொடர முடியும்.
இன்று செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் (HSIS) பிரதமர் மேற்கொண்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்த மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஃபாரிக் ரிசால் அப்துல் ஹமீத் இத்தகவலைத் தெரிவித்தார்.
"நாட்டை வழிநடத்துவதற்கும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழு அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் நிறைவேற்றுவதற்கும், தனது உடல் தகுதியையும் நலத்தையும் உறுதிப்படுத்துவதில் பிரதமருக்கு இருக்கும் தொடர்ச்சியான அக்கறையை இந்தப் பரிசோதனை பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறினார்.
நாட்டின் தலைவரின் நலனை எப்போதும் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, இத்தகைய வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் ஒரு தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.


