ஷா ஆலாம், ஜனவரி 18- லெபிர் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த தனது மகனைக் காப்பாற்ற முயன்றபோது, தந்தை ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.
40 வயதான முகமட் ஃபகாருடின் அப்துல் ஹாலிம் @ அவாங், தனது ஏழு வயது மகனை ஆற்றின் கரைக்குத் தள்ளி காப்பாற்றினார். ஆனால், அதன் பிறகு அவர் ஆற்று நீருக்குள் மூழ்கி, பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் தனது மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
மாலை 5.04 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி நிக் முகமட் ஃபக்ரி எம்டி நாவி தெரிவித்தார். தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தச் சம்பவ இடத்திற்கு எட்டுப் பணியாளர்களுடன் இரண்டு வாகனங்கள் விரைந்தன.
"பாதிக்கப்பட்ட தந்தை தனது மகனை வெற்றிகரமாகக் காப்பாற்றினார், ஆனால் அவரே ஆழமான மற்றும் பலத்த நீரோட்டத்தில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்," என்று அவர் கூறினார். நீரின் மேற்பரப்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR) மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இரவு 7.46 மணிக்குத் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. மீட்புப் பணிகள் இன்று காலை மீண்டும் தொடங்கும்.


