டத்தின் ஸ்ரீ சிசி இசேத்தே மீது சுமத்தப்பட்ட மூன்று வழக்குகள் தொடரப்படும்

16 ஜனவரி 2026, 10:06 AM
டத்தின் ஸ்ரீ சிசி இசேத்தே மீது சுமத்தப்பட்ட மூன்று வழக்குகள் தொடரப்படும்

கோலாலம்பூர், ஜன 16 - பப்ளிக் மீயூச்சுவல் (PUBLIC MUTUAL) நிறுவனத்தில் 15 கோடி ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டை உட்படுத்திய 28 லட்சம் ரிங்கிட் மதிக்கத்தக்க மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடினைக் (காலமானவர்) கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

கடந்தாண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி 66 வயதான புங் மொக்தார் காலமானதை அடுத்து, அவர் மீதான வழக்கைத் தொடர தங்கள் தரப்பு விரும்பவில்லை என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் லோ சின் ஹௌ, இன்று நீதிமன்றத்திடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நீதிபதி ரொஸ்லி அஹ்மாட் இம்முடிவை அறிவித்தார்.

இந்நிலையில், புங் மொக்தார் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்து விடுதலை செய்த நீதிமன்றம், ஜாமின் தொகையான 100,000 ரிங்கிட்டையும் தடுத்து வைத்திருந்த கடப்பிதழையும் உத்தரவாதம் அளித்திருந்த நபரிடம் ஒப்படைத்தது.

எனினும், அக்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக புங் மொக்தாரின் மனைவி டத்தின் ஸ்ரீ சிசி இசேத்தே அப்துல் சமாட் மீது சுமத்தப்பட்ட மூன்று வழக்குகள் தொடரப்படும் என்று லோ முன்னதாக தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்கும்படி டத்தின் ஸ்ரீ சிசி இசேத்தே செய்திருந்த பிரதிநித்துவ மனுவைத் தேசிய சட்டத்துறை அலுவலகம், ஏ.ஜி.சி நிராகரித்ததை அடுத்து இவ்வழக்கு தொடரப்படுகிறது.

தற்காப்பு வாதம் புரியும்படி சிசி இசேத்தேக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், எதிர்வரும் மார்ச் 5, 6 மற்றும் 12-ஆம் தேதிகளில் வழக்கு விசாரணையை நிர்ணயித்தது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.