பெட்டாலிங் ஜெயா, 12 ஜனவரி- கடந்த சில நாட்களாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டிருந்த ஜோகூர்-சிங்கப்பூர் இடையிலான இரண்டு தரைவழிச் சோதனைச் சாவடிகளின் குடிவரவுத் துறை தானியங்கி கதவுவின் செயல்பாடு தற்போது முழுமையாகச் சீரடைந்துள்ளது.
சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் (BSI) மற்றும் கெலாங் பாத்தாவில் உள்ள சுல்தான் அபு பாக்கார் வளாகம் (KSAB) ஆகியவற்றில் உள்ள இந்த செயல்பாடு நள்ளிரவு முதல் முழுமையாகச் செயல்பட தொடங்கியுள்ளதாக ஜோகூர் மாநில பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு விவகாரங்களுக்கான செயற்குழு உறுப்பினர் முகமட் ஃபஸ்லி முகமட் சல்லே தெரிவித்தார்.
"தானியங்கி கதவு முறைமை நள்ளிரவு முதல் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. BSI மற்றும் KSAB ஆகிய இரண்டு சோதனைச் சாவடிகளிலும் குடிவரவுச் செயல்பாடுகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன. இனி கடந்த சில நாட்களாக புகாரளிக்கப் பட்டதைப் போன்ற கடுமையான நெரிசல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது," என அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை, இந்தத் தானியங்கி கதவு செயல்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. இதனால் பயணிகள் குடிவரவுச் சோதனைகளை முடிக்கச் சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
இருப்பினும், இக்காலகட்டத்தில் மலேசியப் பிரஜைகள் தொடர்ந்து தானியங்கி கதவுகளைப் பயன்படுத்த முடிந்தது என்றும், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுக்கான குடிவரவுச் சோதனைகள் வழக்கம் போல் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


