ஷா ஆலம், ஜன 5: இன்று வழங்கப்படும் புத்தாண்டு உரையின் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பல முக்கியமான அரசாங்க நடவடிக்கைகளைப் பற்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 9 மணிக்கு நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
"இன்று ஜனவரி மாதத்தின் முதல் திங்கட்கிழமை, மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பிரதமர் அமைச்சரவையை ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"அதன் பிறகு, பிரதமர் சிறப்புரை வழங்குவார். இது அரசாங்கத்தின் புதிய நடவடிக்கைகளை அறிவிக்க ஒரு முக்கியமான தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று டிஏபி மலாக்காவின் 25வது ஆண்டு மாநாட்டை தலைமை தாங்கி உரையாற்றும்போது அந்தோணி லோக் கூறினார்.
இந்த அறிவிப்பு மக்களின் பிரச்சனைகளை, குறிப்பாக பொருளாதாரம், கல்வி மற்றும் நிறுவன சீர்திருத்தம் உள்ளிட்டவற்றை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
"மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் உயர் அர்ப்பணிப்பைக் காட்டும் பல முக்கியமான அறிவிப்புகள் இன்று பிரதமரால் வெளியிடப்படும் என்று நான் நம்புகிறேன்," என அவர் கூறினார்.








