பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 2 – ரமலான் சந்தை இடங்களுக்கான பதிவு செயல்முறை வெளிப்படையாகவும், முகவர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் தலையீடு இல்லாமலும் நடைபெறுவதை உறுதிசெய்ய, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் (PBT) இணையவழிப் பதிவை அமல்படுத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ரமலான் முழுவதும் பருவகால வணிக நடவடிக்கைகளை நம்பியுள்ள சிறு வணிகர்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வணிக வாய்ப்புகள் நியாயமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை முக்கியம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மேலும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) செயல்படுத்தும் டிஜிட்டல் பதிவு முறையை நாடு முழுவதும் உள்ள மற்ற நகராண்மைக் கழகங்கள் உதாரணமாக கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பெட்டாலிங் ஜெயாவின் இணைய வழிப் பதிவு மூலம் அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த செயல்முறை மிகவும் ஒழுங்கமைக்கப் பட்டதாகவும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் முகவர்களைத் தவிர்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மேலும் பதிவு தொடர்பான பிரச்சனை தவிர்த்து, ரமலான் சந்தை பகுதிகளில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். ரமலான் சந்தை இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும், இதில் மாநில அரசாங்கங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் இணைந்து போதுமான நீர் விநியோகம் மற்றும் திருப்திகரமான தூய்மை நிலையை உறுதி செய்வதும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் (KPKT) மேலும் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.








