புத்ராஜெயா, ஜனவரி 2 – நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சீருடை வண்ண வேறுபாடுகளை நீக்கும் வகையில், பள்ளிச் சீருடைகளைத் தரப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல விரிவான ஆய்வு மற்றும் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி இயக்குநர் டாக்டர் முஹமட் அசாம் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
"அதிக வண்ணங்களைக் கொண்ட பள்ளிச் சீருடைகள் நம் குழந்தைகளிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க ஊக்குவிப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். சிறு வயதிலிருந்தே வேறுபாடுகளையும் போட்டியையும் வலியுறுத்தும் வகையில் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம் என்ற கவலை உள்ளது," என்று அவர் மேற்கோள் காட்டினார்.
இறுதி முடிவு ஆகஸ்ட் 2026-க்குள் அறிவிக்கப்படும் என்றும், 2027-ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மற்றும் படிவம் ஒன்று மாணவர்களுடன் படிப்படியாக அமலாக்கம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது சில பள்ளிகளில் ஏழுக்கும் மேற்பட்ட வண்ணங்களைக் கொண்ட சீருடைகள், பல்வேறு நடவடிக்கைகளுக்கான பல பிளேசர்கள், வெஸ்ட்கள் போன்ற கூடுதல் பொருட்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த மாறுபட்ட தேவைகள், கல்வியாண்டின் நடுப்பகுதியில் பள்ளிகளை மாற்றும் மாணவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவதாகவும், குடும்பங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். "ஆகவே, மாணவர்களின் கல்விக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வெளிப்படையான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் புதிய கல்வியாண்டுக்குத் தயாராகும் போது பெற்றோர்களின் நிதிச் சிக்கல்களையும், குறிப்பாகப் பல பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் நிதிச் சிக்கல்களையும் அமைச்சு கருத்தில் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.








