கோத்தா திங்கி, டிச 31 - ஜோகூரில் உள்ள கோத்தா திங்கி, பண்டார் பெனாவரில், ஏற்பட்ட மண்சரிவில் இந்தோனேசிய ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மற்றொரு தொழிலாளர் தன்னை காப்பாற்றிக் கொண்டு பாதுகாப்பாக வெளியேறினார்.
கட்டுமானப் பணிகளில் நடைபெற்று வந்த தொழிற்சாலை ஒன்றின் முன்புறத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 52 வயதுடைய அந்நபர் மரணமடைந்ததாக, உதவி தீயணைப்புத் தலைவர், மூத்த நடவடிக்கை கமெண்டர் முஹமட் கைருல் சுஃபியான் டஹாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து நண்பகல் மணி ஒன்றுக்கு தமது தரப்பு அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். தீயணைப்பு துறையினர் அடுத்த 5 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை அடைந்து மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டது.
மரணமடைந்தவரின் உடல் மாலை மணி 4 அளவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


