புத்ராஜெயா, டிச 31 - இவ்வாண்டிற்கான அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு சிறப்பு கால அவகாசத்தை உள்துறை அமைச்சு (கே.டி.என்) தெரிவித்துள்ளது. இந்த கால அவகாசம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், நடப்பிலுள்ள ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்கள், முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான, இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அந்த அமைச்சு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சிறப்புக் கால அவகாசம், 2025-ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதியில், அரசாங்கம் அங்கீகரித்த அனைத்து துறைகள் மற்றும் துணைத் துறைகளுக்கான விண்ணப்பங்களை உள்ளடக்கியது.
இந்தச் சிறப்பு காலத்தில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிப்பதில், மேற்பார்வை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்தப்பட இருப்பதோடு, அந்நியத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தும் இதர நிபந்தனைகளையும் உட்படுத்தி உள்ளதாக கே.டி.என் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், முகவர் அல்லது மூன்றாம் தரப்பினர் மூலம் அல்லாமல், உள்துறை அமைச்சின் அந்நிய தொழிலாளர்கள் நிர்வகிப்பு ஓரிட மையத்தில், நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனைத்து முதலாளிகளுக்கும் அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
--பெர்னாமா


